Recent Posts

Search This Blog

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது.

Wednesday, 11 October 2023


நூருல் ஹுதா உமர் 

உலக ஆசிரியர் தினத்திற்கு இணைவாக கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும், ஆசிரியர் மற்றும் அதிபர்களை பாராட்டும் வைபவத்தில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அதிபர், பிரதி அதிபர் உட்பட இரண்டு ஆசிரியர்களுக்கு "குரு பிரதீபா பிரபா - 2023" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 


அதிபர் யூ.எல்.நஸார், பிரதி அதிபர் ஏ.பி. ஷெறோன் டில்றாஸ், ஆசிரியர்களான ஏ.எல்.எம்.இர்ஷாத், கே.எல்.ஏ. ஜஃபர் ஆகியோரே இவ்வாறு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வு, கல்வியமைச்சின் முகாமைத்துவம் மற்றும் தர உறுதிப்பாட்டுக் கிளை ஏற்பாட்டில் இசுருபாய பத்தரமுல்லயில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. 


மாகாண ரீதியில் நடைபெற்ற தரப்படுத்தலிலும், பல்வேறு முன்னுதாரணமான செயற்பாடுகளுக்கு மதிப்பீட்டு அறிக்கைகளின் பிரகாரம் ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்ட இப்பாடசாலை, பல்வேறு அடைவுகளை எட்டி தேசிய ரீதியான இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இவ்விழாவிற்கு தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 27 பாடசாலைகளில் இரண்டு முஸ்லிம் பாடசாலைகள் மட்டுமே அடங்குகின்றன. அதில், வடமாகாணத்தில் இருந்து ஒரு பாடசாலையும், கிழக்கு மாகாணத்தில் இருந்து அல்-ஹிலால் வித்தியாலயம் மட்டும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இதனூடாக கல்முனை கல்வி வலயத்தில் இருந்து National Level Principals and Teachers Evaluation for best Practice என்ற மதிப்பீட்டின் பிரகாரம் இந்த விருதை இப்பாடசாலை பெற்றுக் கொண்டுள்ளது.


விருது பெற்ற அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாடசாலை சமூகம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.



No comments:

Post a Comment