Recent Posts

Search This Blog

மினுவாங்கொடையில் 8 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு சஹீதா பவுண்டேஷன் 100 இலட்சம் ரூபா நிதி உதவி.

Thursday, 21 September 2023



கம்பஹா, மினுவாங்கொடை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நௌபர் பௌசிக்கு சொந்தமான சஹீதா பவுண்டேஷன் முன்வந்துள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை கல்வி வலயத்தின் பிரிவில் உள்ள 8 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு பவுண்டேஷன் 100 இலட்சம் ரூபாவை வழங்கியது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நேற்று (20) மினுவாங்கொடை கல்வி வலய அலுவலகத்தில் இடம்பெற்றது.

மினுவாங்கொடை நில்பனாகொட மகா வித்தியாலயம், ஹொரம்பெல்ல சீலவிமல மகா வித்தியாலயம், மினுவாங்கொடை கொரச ரணசிங்க மகா வித்தியாலயம், நதகமுவ கனிஷ்ட வித்தியாலயம், ஓபாத ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பாடசாலை, உடுகம்பல றோமன் கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலை, உடுகம்பல ஆரம்பப் பாடசாலை மற்றும் மினுவான்கொடை அல் அமான் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இந்தத் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ் இப்பாடசாலைகளின் பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

இதேவேளை கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள 34 பாடசாலைகளை நவீன உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் செயல்படுத்தியுள்ளது.  

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளின் கட்டிடங்கள் தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. இக்கட்டடங்களை முழுமையாக சீரமைக்க பாடசாலைகளிடம் பணம் இல்லாததால் அடிக்கடி சிறிய சிறிய சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது.

இது தொடர்பில் கவனம் செலுத்திய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் உரிய முறையில் ஆய்வு செய்து அந்த பாடசாலைகளின் அபிவிருத்திக்கான திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்தார்.


இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பட்டய பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள் கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சென்று தரவுகளை பெற்று இந்த அபிவிருத்தி திட்டத்தை தயாரித்துள்ளனர். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இந்தத் திட்டம் புதுப்பிக்கப்படும். மேல்மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேல் மாகாண ஆளுநர் விமானப் படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவினால் இந்த அபிவிருத்தித் திட்டமும் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் நௌபர் பௌசி, மினுவாங்கொடை கல்விப் பணிப்பாளர் வஜிர ரணராஜ பெரேரா, மினுவாங்கொடை பிரிவு கல்விப் பணிப்பாளர் விஜித சோமசிறி மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முனீரா  அபூபக்கர்



No comments:

Post a Comment