ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு வகையிலான போட்டிகள் நடைபெற்றாலும் அதில் கிரிக்கட் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அனைவரின் கவனமும் நேபாள அணியின் மீது திரும்பியுள்ளது. இன்று நடைபெற்ற மங்கோலிய அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் சர்வதேச T20 அரங்கில் பல்வேறு சாதனைகளை தகர்த்து, தங்களின் பெயரை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது எனலாம்.
T 20 போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள், அதிவேக அரைசதம், அதிவேக சதம் என ஒரே போட்டியில் டி20 வடிவத்தின் சாதனை பட்டியல்களில் தஙகள் பெயரை பதிவு செய்துவிட்டது, நேபாள அணி. இன்று என்னென்ன சாதனைகள் படைக்கப்பட்டன, எந்தெந்த சாதனைகள் வீழ்த்தப்பட்டன என்பது குறித்து இதில் முழுமையாக காணலாம்.
குவிக்கப்பட்ட சாதனைகள்
ஆசிய விளையாட்டு போட்டியில் மங்கோலிய அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில், டாஸ் வென்ற நேபாள அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 314 ரன்களை குவித்துள்ளது. இதுதான் ஒரு இன்னிங்ஸில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன், 2019ஆம் ஆண்டில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்தது.
அதுமட்டுமின்றி, ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி என்ற சாதனையையும் நேபாளம் படைத்துள்ளது.
மங்கோலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் 26 சிக்ஸர்களை அந்த அணி விளாசியுள்ளது. இதற்கு முன் 2019இல் அயர்லாந்து எதிராக 278 ரன்களை ஆப்கானிஸ்தான் பதிவு செய்தபோது 22 சிக்ஸர்களை அந்த இன்னிங்ஸில் அடித்திருந்தது. தற்போது இந்த சாதனையையும் நேபாளம் தகர்த்தது.
அதிவேக அரைசதம்
ஆனால், இவை எல்லாவற்றையும் மிஞ்சும் அளவிற்கு இன்னும் இரண்டு அசத்தலான சாதனைகளை நேபாள அணியின் இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் இன்று செய்துள்ளனர்.
அந்த அணியின் தீபேந்திர சிங் ஐரி 10 பந்துகளில் அரைசதம் அடித்து, 12 பந்துகளில் அரைசதம் அடித்த யுவராஜ் சிங்கின் நீண்ட கால சாதனையை இன்று தகர்த்தார்.
யுவராஜ் சிங் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவட் பிராட் ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்களை அடித்த அதே போட்டியில் தான் அந்த 12 பந்துகளில் அரைசதமும் அடித்திருந்தார். சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனை இன்று தகர்ந்தது.
அதிவேக சதம்
மொத்தம் 10 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 52 ரன்களை தீபேந்திர சிங் ஐரி இன்றைய போட்டியில் எடுத்தார். மேலும் மற்றொரு சாதனையாக நேபாள அணியின் நம்பர் 3 வீரர் குஷால் மலாலா ரோஹித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் சாதனைகளான டி20 போட்டிகளில் அதிவேக சதத்தை இன்று தனதாக்கிக் கொண்டார்.
குஷால் மலாலா வெறும் 34 பந்துகளில் சதம் அடித்து மிரட்டி உள்ளார்.
ஒட்டுமொத்தமாக அவர் 50 பந்துகளில் 8 பவுண்டரிகள், 12 சிக்ஸர்களுடன் 137 ரன்களை எடுத்துள்ளார். ரோஹித் மற்றும் மில்லர் ஆகியோர் 35 பந்துகளில் சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
நேபாள அணி முதலில் பேட்டிங் செய்து 314 ரன்களை குவித்த நிலையில், மங்கோலிய அணி 13.1 ஓவர்களில் 41 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால், 273 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் வெற்றி பெற்றது. மேலும், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் நேபாளம் இன்று படைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
zee tamil -
No comments:
Post a Comment