Recent Posts

Search This Blog

சூழல் விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அறிவுறுத்தலில் அதிரடி ஏற்பாடுகள்.

Tuesday, 1 November 2022


(ஊடகப்பிரிவு)

சூழல் பற்றிய விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு, சுற்றாடல் மத்திய அதிகார சபை மூன்று முக்கிய நிகழ்வுகளை சுற்றாடல் அமைச்சில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அறிவுறுத்தளுக்கு அமையவும் அவரது ஏற்பாடுகளுக்கு அமையவும் இந்த நிகழ்வு நேற்று (31) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஹாபிஸ் நசீர் தெரிவித்ததாவது,

சுற்றாடல் சம்பந்தமாக பொது மக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை ஒருங்கிணைத்து முகாமைத்துவம் செய்யும் செயற்பாடுகளில் சுற்றாடல் மத்திய அதிகார சபை ஈடுபடவுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளைத் தீர்ப்பதற்கு இணையவழித் தகவல் முறைமையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது, முறைப்பாடு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து அலைக்கழிவதை இல்லாமலாக்கும்.

மேலும், இவ்வாறான இலகுபடுத்தல்களால் பொதுமக்களும் சுற்றாடல் குறித்த முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதில் ஆர்வம் செலுத்துவர். இந்தச் சேவையை ஆரம்பித்ததற்கான நோக்கம், முறைப்பாட்டாளர்களின் சிரமங்களை இலகுபடுத்துவதே!. இது, தொழினுட்ப நாகரிகத்துக்கேற்ற ஒரு முறையாக உள்ளது.

வருடாந்த மற்றும் பருவகால அறிக்கைகளை உள்ளடக்கியதாக
சுற்றாடல் பல புத்தகங்களை வௌியிடுகிறது. இவற்றை, நாங்கள் ஆரம்பித்துள்ள இணையப் புத்தகத்திலிருந்து தரவிறக்கம் செய்து பார்வையிட முடியும். பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட சுற்றாடல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர் இந்நூலிலிருந்து தேவையான தகவல்களைப் பெறமுடியும். தேவையான தகவல்களை இணையத்தில் தேடிக்கொள்ளும் இன்றைய காலங்களில், சுற்றாடல் அமைச்சும். இணையவசதிகளை பிரதான சேவையில் இணைத்துக் கொண்டுள்ளது.

இந்தச் சேவைகளில், உள்ளகக் காற்றுத் தரப்படுத்தல் திட்டமும் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் கூட, நாம் சுவாசிக்கும் வளியை (காற்று) தரப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் மேலும் தரப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் வழிகாட்டல்கள் வழங்குவதற்கும் சுற்றாடல் அமைச்சு முன்வந்துள்ளதாகவும், அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment