Recent Posts

Search This Blog

சவால்மிக்க நேரத்தில் நாட்டை மீட்க முன்வந்த ஜனாதிபதி ரணில் யுகபுருஷர்

Wednesday, 10 August 2022


முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டு அனைத்து நெருக்கடிகளுக்கும் தீர்வு காணும் வகையில் அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம்.


அத்துடன்  134 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவை தேர்தல் நடத்தப்பட்டால்  எந்தவித சந்தேகமும் இன்றி அவரது தலைமைத்துவத்தை மக்கள் ஏற்றுக் கொள்வது உறுதி என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி புதன்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டு அனைத்து நெருக்கடிகளுக்கும் தீர்வு காணும் வகையில் அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம்.


அரசாங்கத்தில் தவறுகள் இருப்பின் அவை சுட்டிக்காட்டப்பட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. அதற்காகவே சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


நாட்டில் நிலவிய எரிபொருள், சமையல் எரிவாயு , உரம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டும்.


அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும்  கடந்த வருடம் முதல் எமது ஏற்றுமதி வருமானம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் காலை வாருவதை விடுத்து அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


அத்துடன் ஜப்பான் ஜெய்க்கா நிறுவனத்தின் வேலைத்திட்டங்கள் இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அந்த திட்டங்கள் நிறுத்தப்படவில்லை. தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் அந்தத் திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு 12 திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதும் மீண்டும் அந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் .


அத்துடன் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் தமக்குள்ள அதிகாரங்கள் அனைத்தையும் மீளப்பெற்று பாராளுமன்றத்திற்கு அதனை வழங்கவும் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.


அவ்வாறான ஒரு நேர்மையான தலைவர் அவர். இந்த அரசாங்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல போதிய பலத்தை அவருக்கு பெற்றுக் கொடுப்பது முக்கியமாகும்.


அத்துடன் நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள கோத்தாபய ராஜபக்ஷ் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்த போதும் யாரும் முன்வரவில்லை.


இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க தனது எதிர்கால அரசியலை கண்டுகொள்ளாது அந்த சவாலை ஏற்றுக்கொள்ள முன்வந்தார்.


அப்படிப்பட்ட யுகபுருஷரையே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். 134 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவை தேர்தல் நடத்தப்பட்டால்  எந்தவித சந்தேகமும் இன்றி அவரது தலைமைத்துவத்தை மக்கள் ஏற்றுக் கொள்வது உறுதியாகும் என்றார்.



No comments:

Post a Comment