கலாசார நிதியத்தின் நிதி முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபையில் புதன்கிழமை (06) விடுத்த சவாலுக்கமையை உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுன எம்.பி மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) கூற்றொன்றை முன்வைத்தே இதனை வலியுறுத்தினார். கலாசார நிதியத்தின் நிதி பிரயோகம் சட்டத்திற்கு முரணானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என மத புத்த சாசன,சமய விவகார கலாசார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதற்கான கணக்காய்வு அறிக்கையை நான் சபையில் சமர்ப்பித்துள்ளேன்.
அதன் மூலம் இந்த மோசடி உறுதியாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தமது மனைவியின் சலூனுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டுள்ளமை தொடர்பிலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அவர் பாராளுமன்றத்தில் விடுத்த சவாலுக்கமைய பாராளுமன்றத்தின் கௌரவத்தை மதித்து உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., கலாசார அமைச்சுக்கான செயல்பாடுகள் அனைத்தும் அமைச்சரவை அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நான் சபையில் உறுதிப்படுத்தியுள்ளேன் என்றார் .



No comments:
Post a Comment