Recent Posts

Search This Blog

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி Dr. ராஹுல் ஹக்கினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை தொடர்பில் தனியான விசாரணை.

Saturday, 5 August 2023


பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ராஹுல் ஹக் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் பரிசீலனை செய்யவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வைத்திய சபையால் விதிக்கப்பட்ட பணிநீக்கத்தை நடைமுறைப்படுத்துமாறு கடந்த ஜனவரி மாதம் பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ராஹுல் ஹக்கின் பிரேத பரிசோதனை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட தகவல் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த ஹம்தி பஸ்லின் என்ற மூன்று வயது சிறுவனின் பிரேத பரிசோதனை மற்றும் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை என்பன கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ராஹுல் ஹக்கினால், நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவர் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், அவரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை தொடர்பில் தனியான விசாரணை நடத்தப்படவுள்ளது.

அத்துடன், அவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக அரச சேவை ஆணைக்குழுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment