வீதி விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 (இந்திய ரூபா ) வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு வர்த்தமானி வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நடந்த வீதி விபத்துகளில் 1.32 இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பலர், விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை கிடைக்காததால் இறந்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது.
அதில், சாலை விபத்துகளில் சிக்கியவரை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்குவதோடு, சிறந்த காப்பாளர் விருதும் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் 10 சிறந்த காப்பாளர்களுக்கு, மத்திய அரசின் விருது மற்றும் 1 இலட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதே போல புதுச்சேரி அரசும் , வீதி விபத்தில் சிக்கியவரை காப்பாற்றி, உடனடியாக மருத்துவ வசதி கிடைக்க உதவுவோருக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது.
தற்போது வீதி விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் , வீதி விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் மத்திய அரசால் வழங்கப்படும் ரூ.5,000 தொகையுடன் மாநில அரசின் சார்பில் கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.



No comments:
Post a Comment