வெலிகம தெனிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) இரவு 9.40 மணியளவில் தெனிப்பிட்டி முல்லபொக்க வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பெலன பிரதேசத்தைச் சேர்ந்த கமல் சமிந்த என்ற 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாகவும், அவரது 20 வயது மகன் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய நேரத்தில், மகன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.
தந்தையை துரத்திச் சென்று அவர் மார்பிலும் கையிலும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் அங்கு சுமார் 20 தோட்டாக்களை பயன்படுத்தியதாக சிதறி கிடந்த தோட்டா உறைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் எனவும் இதற்கு முன்னர் பல குற்றச் சாட்டுகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர், வெலிகம பொலிஸார் மற்றும் அருகிலுள்ள பல பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


No comments:
Post a Comment