ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இரண்டு நாடுகளில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வைத்த யோசனையை இலங்கை எதிர்த்ததாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டிக்கு முன்பதாக நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை எங்கு, எவ்வாறு நடத்துவது என்ற விடயம் நாளுக்கு நாள் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது.
இந் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கட் சபை, ஆசிய கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகள் டுபாயில் ஆராய்ந்த போது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இரண்டு நாடுகளில் நடத்தலாம் என்ற யோசனையை பாகிஸ்தான் முன்வைத்தது.
பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என இந்தியா தீர்மானித்ததாலேயே இந்த யோசனை பாகிஸ்தானினால் முன்வைக்கப்பட்டது.
ஆனால், இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் யோசனையை இலங்கை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
'இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் யோசனையை நாங்கள் நிராகரிக்கிறோம் என எழுத்து மூலம் ஆசிய கிரிக்கெட் பேரவைக்கு அறிவித்துள்ளோம். ஆனால், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. போட்டி நடைபெறும் காலத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடும் உஷ்ணம் நிலவும்' என மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment